மகிந்த ஆட்சியில் ஐ.நா அறிக்கை வெளியாகியிருந்தால் பாரதூரமான நிலைமை ஏற்பட்டிருக்கும் : மைத்திரி - ரணில்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள இலங்கை சம்பந்தமான அறிக்கையை விமர்சன ரீதியாகவும் புத்திசாலித்தனமாகவும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தெரிவித்துள்ளனர். சில ஊடகங்கள் இது குறித்து ஏற்கனவே வெளியிட்டுள்ள கருத்துக்கள் தவறானவை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். ஊடகங்களில் பிரதானிகளை இன்று சந்தித்த போதே ஜனாதிபதியும் பிரதமரும் இவற்றை குறிப்பிட்டுள்ளனர். கடந்த அரசாங்கம் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருந்திருந்தால், நாடு மிகவும் பாரதூரமான நிலைமையை எதிர்நோக்க நேரிட்டிருக்கும் என்பதை மறந்து விடக் கூடாது. இதனால், அறிக்கையை தாறுமாறாக விமர்சிக்கக் கூடாது. இந்த அறிக்கை கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதிக்கு முன்னர் வெளியாகி இருந்தால், நிலைமை மிகவும் பாரதூரமானதாக இருந்திருக்கக் கூடும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கம் பதவிக்கு 19வது அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றி, சுயாதீன ஆணைக்குழுக்களை மீள ஏற்படுத்திய பின்னர், இலங்கை குறித்து உலகம் முழுவதும் நல்லப்பிராயம் ஏற்பட்டுள்ளது. இதனடிப்படையில், குறித்த அறிக்கை அன்று வெளியாகி இருந்தால், எண்ணிப்பார்க்க முடியாதளவில் பாரதூரமான நிலைமையை எதிர்நோக்க நேரிட்டிருக்கும். எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 24ம் திகதி முன்வைக்கப்படும் இறுதி யோசனையின் அடிப்படையில், இலங்கை இறுதி தீர்மானத்தை எடுக்கும் எனவும், தேசிய விசாரணை அல்லது சர்வதேச விசாரணை ஆகிய இரண்டில் இலங்கை தெரிவு செய்ய நேரிடும் எனவும், தேசிய விசாரணையையே இலங்கை கட்டாயம் தெரிவு செய்யும் என்றும் ஜனாதிபதியும் பிரதமரும் கூறியுள்ளனர். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் எதிராக இருந்த பல நாடுகள் தற்போது நட்பு நாடுகளாக மாறியுள்ளன. அன்று எதிரியாக இருந்த நாடுகள் தற்போது இலங்கைக்கு ஆதரவு வழங்கியுள்ளன. இதனடிப்படையில் தளர்வான யோசனை முன்வைக்கப்படும் என்பது தனது நம்பிக்கை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அத்துடன் ஐ.நா அறிக்கையில் எந்த இடத்திலும் போர் குற்றம் பற்றியோ, போரை நடத்தியவர்கள் குறித்தோ குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.