வடக்கு எமக்கே உரியது: பொது பலசேனாவின் கலகொட அத்தே ஞானசார தேரர்!
வடக்கு எமக்கே உரியது. இலங்கையில் 2500 வருட பழைமையான இனம் சிங்கள இனமே. அதனால் வடக்கை தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது என பொது பலசேனாவின் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். வவுனியா நகரில் நேற்று பொதுபல சேனா ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
'தமிழர்கள் இலங்கையை அல்லது வடக்கை சொந்தம் கொண்டாட முடியாது. பெரும்பான்மை இனத்தனவரான சிங்களவர்களுக்கே வடக்கு சொந்தம். மேலும் வடக்கில் விகாரைகள் அகற்றப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றது. அவை அனைத்தும் முறைகேடானது. இலங்கையை உருவாக்கியது பௌத்தர்களே அவர்களுக்கு எங்கும் விகாரைகள் எழுப்ப உரிமையுள்ளது. இந்த போராட்டம் வெறும் ஆரம்பம் மட்டுமே. எமக்கான உரிமைகளை பெற்றுக் கொள்ளும் வரை போராட்டம் தொடரும்.
அடுத்து யாழ்ப்பாணத்திலும் சென்று ஆர்ப்பாட்டம் நடத்த எமக்கு முடியும். அதற்கான உரிமையும் எமக்கு உண்டு. இன்று கொழும்பில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அவர்களை நாம் அனுசரித்தே வாழ்கின்றோம். சிங்கள மக்கள் நல்லுறவுடன் செயற்படுகிறார்கள். தமிழ் மக்களே பிரிவினையை ஏற்படுத்தப்பார்கிறார்கள். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கொழும்பில் வசித்ததால் அவர் இனங்களுக்கிடையில் நட்புறவை ஏற்படுத்துவார் என எதிர்பார்தோம். ஆனால் அவரும் அவரது கூட்டமைப்பும் இன்றும் புலிகளின் கொள்கையையே கடைப்பிடிக்கிறது எனத் தெரிவித்தார்.
இதேவேளை தமிழர் வாழும் இடத்தில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை நீங்கள் செய்யும் போது தமிழர்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த மாட்டார்களா? அவர்களுக்கு அதிருப்தி அளிக்காதா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, தமிழர்களுக்கு இங்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்த போராட்டத்தை நடத்துபவர்கள் இந்த நாட்டின் பெரும்பான்மை இனமான சிங்களவர்கள். எமக்கு அதற்கான உரிமை உள்ளது. எந்த பிரச்சினை வந்தாலும் அதற்கு முகம் கொடுத்து நாம் எமது கோரிக்கைகளை நிறைவேற்றி வடக்கை பெற்றுக்கொள்வோம் எனவும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.