இந்தியாவுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(29) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்திருந்தார்.
குறித்த சந்திப்பில் இருதரப்பு முக்கியதுவம் வாய்ந்த விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய பிரதமரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றுள்ள ஜனாதிபதி இன்று(29) இந்திய ஜனாதிபதி ராமநாத் கோவிந்தையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அந்த நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து இந்திய பிரதமரின் அழைப்பையேற்று தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவிற்கு சென்றமை குறித்து இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அயல் நாடுகளான இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே காணப்படும் நீண்டகால நட்புறவு ஜனாதிபதியின் இந்த பயணத்தின் ஊடாக மேலும் பலப்படுமென தான் நம்புவதாக குறிப்பிட்ட இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், இலங்கையில் புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கப்பெறுமெனவும் தெரிவித்தார்.
பொருளாதார அபிவிருத்திகளை நோக்காகக் கொண்ட பரஸ்பர நன்மைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய புதிய அணுகுமுறையினூடாக இந்திய - இலங்கை தொடர்பினை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமென்பது பிரதமர் நரேந்திர மோடியின் எதிர்பார்ப்பாகுமெனவும் அமைச்சர் ஜெய்சங்கர் இதன்போது தெரிவித்தார்.
இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக ஒத்துழைப்புகள் தொடர்பாகவும் கருத்து தெரிவித்த இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், தரமான வர்த்தக கட்டுப்பாட்டு முறைமையொன்று காணப்பட வேண்டியது அதற்கான அடிப்படை தேவையாகும் எனவும் இதனூடாக வெளிநாட்டு முதலீடுகளை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.
இந்தியாவிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடியினால் தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இரு நாடுகளுக்குமிடையிலான நட்பினை மேலும் பலப்படுத்த தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
அதேநேரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முக்கிய கலந்துரையாடலில் ஈடுபடுகிறார்.