கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் வேண்டும்; பா.ஜ.,முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டி
காரைக்குடி : ஹிந்துக்கள் மீது மதமாற்ற தாக்குதல் தொடர்ந்து நடந்து வருவதாக பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
காரைக்குடியில் அவர் கூறியதாவது: பிளஸ் 2 மாணவி லாவண்யா பள்ளி ஆசிரியர் துாண்டுதலால் தான் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியை மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தியுள்ளனர். மாணவி இறக்கும் முன்பு மதமாற்றத்திற்கு மறுத்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தஞ்சை மாவட்ட எஸ்.பி., ரவளிப்பிரியா பேட்டி ஒன்றில் மதமாற்றம் நடந்ததாக தெரியவில்லை என்று கூறியுள்ளார். குழு அமைத்து விசாரணை நடக்க உள்ளதாக கூறிய நிலையில், விசாரணை முடியாமல் மதமாற்ற முயற்சி நடைபெறவில்லை என்று அவர் எவ்வாறு உறுதி செய்தார். மதமாற்ற தாக்குதல், ஹிந்துக்கள் மீது தொடர்ந்து நடந்து வருகிறது. லாவண்யாவின் பெற்றோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பா.ஜ.,வின் தொடர் போராட்டத்தால் விடுவிக்கப்பட்டனர். தற்போது, போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு சம்மன் அனுப்பாமல், மீண்டும் லாவண்யாவின் பெற்றோருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.இந்த வழக்கை என்.ஐ.ஏ., அல்லது சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்ய வேண்டும். அல்லது கர்நாடகா போன்ற வேறு மாநிலத்திற்கு வழக்கை மாற்றம் செய்ய வேண்டும்.
அனிதாவிற்காக போராடியவர்கள் இப்போது எதுவும் பேசாமல் இருப்பது வியப்பாக உள்ளது. 2004 முதல் 2014 வரை தி.மு.க., காங்., கூட்டணி மத்தியில் ஆட்சி செய்தது. இதில், குடியரசு தின பேரணியில் 2009 மற்றும் 2014 ஆண்டு என இரண்டு முறை தான் தமிழக ஊர்தி பேரணியில் இடம் பெற்றது. 8 வருடம் பேரணியில் இடம்பெறாதது குறித்து யாரும் பேசவில்லை. இப்போது வாய் திறப்பது ஏன் என்று தெரியவில்லை, என்றார்.