புதுடில்லி-இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பெரீஸ், நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை இன்று சந்தித்துப் பேச உள்ளார்.
அண்டை நாடான இலங்கை, கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்திய அரசு சார்பில் பல உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.பெட்ரோலிய பொருட்களை கொள்முதல் செய்வதற்காக, இலங்கைக்கு கடனாக 3,730 கோடி ரூபாய் வழங்குவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பெரீஸ் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக, நேற்று இந்தியா வந்தார்.டில்லியில் இன்று நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை அவர் சந்தித்துப் பேச உள்ளார். இந்த சந்திப்பில் வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட இருதரப்பு துறைகளை விரிவுபடுத்துவது குறித்து இருநாட்டு அமைச்சர்களும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இதேபோல் நீண்ட காலமாக நிலவி வரும் இந்திய மீனவர்களின் பிரச்னை குறித்தும், இந்த சந்திப்பில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.