சுதந்திர தினத்தன்று உதயமாகிறதா முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் புதிய கட்சி!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் எதிர்வரும் சுதந்திர தினத்தன்று புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தன்று இந்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் பெயர், சின்னம் குறித்து அன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளது. முன்னதாக இவர்கள் தாமரைப் பூவினை சின்னமாக கோரியிருந்தனர். எனினும் தேர்தல்கள் ஆணையாளர் அதனை வழங்க மறுத்துள்ளதால் தாமரை மொட்டு சின்னத்தில் கட்சி செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த கட்சிக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தலைவராக செயற்படுவார் என்றும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை ஐ.ம.சு.கூட்டமைப்பின் தலைவராக்கும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீவிரம் காட்டி வருவதால் மகிந்த இந்த கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.
எனினும், முன்னாள் ஜனாதிபதியின் முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் இதற்கு இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்தப் புதிய கட்சிக்கு ஐக்கிய மக்கள் சுத்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 70 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.