அரச ஊழியர்களின் ஆடை தொடர்பிலான சுற்றறிக்கை இடைநிறுத்தம்!
Published on June 3 2019
கடந்த 29ஆம் திகதி வெளியிடப்பட்ட அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்றறிக்கை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்ப்பினைத் தொடர்ந்து இடைநிறுத்தியுள்ளதாக பொதுநிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.
30 வருடங்கள் பழமை வாய்ந்த குறித்த சுற்றறிக்கையை மீண்டும் அமுல்படுத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து குறித்த சுற்றறிக்கை இடைநிறுத்தம் செய்துள்ளதாக பொதுநிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த 29 ஆம் திகதி வெளியான சுற்றறிக்கையில் அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது கடமை நேரத்தில் அலுவலக வளாகத்திற்குள் வரும் போது ஆண் உத்தியோகத்தர்கள் காற்சட்டை மற்றும் மேற்சட்டை அல்லது தேசிய உடை அணிந்திருத்தல் வேண்டும் என்பதுடன் பெண் உத்தியோகத்தர்கள் சேலை அல்லது கண்டியச் சேலை (ஒஸரி) அணிந்திருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.