இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக இருந்ததால் இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கிய புஜாராவைத் தவிர மற்ற வீரர்கள் சொற்க ரன்களில் ஆட்டம் இழந்தனர். புஜாரா அவுட்டாகாமல் 145 ரன்களும், மிஸ்ரா 59 ரன்கள் எடுக்கவும் இந்தியா 312 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி இசாந்த் சர்மாவின் வேகத்தில் 201 ரன்னில் சுருண்டது. ஒரு கட்டத்தில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்திருந்தது. குஷால் பெரேரா (55), ஹெராத் (49) ஆகியோரின் உதவியால் தப்பித்தது. 111 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.
தொடக்க வீரராக புஜாரா, ராகுல் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை தமிகா பிரசாத் வீசினார். தொடக்கமே இந்தியாவிற்கு அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரின் 2-வது பந்தில் புஜாரா கிளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்த ஓவரில் ராகுல் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரகானே 4 ரன்னுடன் பெவிலியின் திரும்பினார். இந்தியா 7 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய மூன்று விக்கெட்டுகளை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு கோலியுடன், ரோகித் சர்மா களம் இறங்கினார். ஒருபுறம் விராட் கோலி நிதானமாக விளையாட மறுமுனையில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடினார். ஹெராத் வீசிய ஓவரில் இமாலய சிக்சர் ஒன்று விளாசினார். இந்தியா 8.1 ஓவரில் 21 ரன்கள் எடுத்திருக்கும்போது மழைக்குறுக்கீட்டது. அத்துடன் மூன்றாவது நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. கோலி 1 ரன்னுடனும், ரோசித் சர்மா 14 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இந்தியா தற்போது 132 ரன்கள் முன்னிலையில் உள்ளது. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளன. இன்னும் 2 நாட்கள் முழுவதுமாக உள்ளது. நாளை இந்த இருவரும் ஒரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடி 250 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றால் இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. இதற்கு தினசரி அச்சுறுத்தி வரும் வருண பகவான் வழியிட வேண்டும். இன்று ஒருநாளில் மட்டும் 15 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன. ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக இருப்பதாலும், வழக்கமாகவே காலையில் பந்து வீச்சுக்கு ஆடுகளம் அதிக அளவில் ஒத்துழைப்பதாலும் இந்தியாவிற்கு நாளை காலை போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.