இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணை செயற்பாட்டில் வடக்கு மாகாணசபையை இணைத்துக் கொள்வதா, இல்லையா என்பது குறித்து இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
யுத்தம் தொடர்பான உள்ளக விசாரணைப் பொறிமுறை அமைக்கும் பேச்சுகளில் வடக்கு மாகாணசபை உள்ளடக்கப்பட வேண்டியது அவசியமானது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ - மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளமை குறித்து நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கருத்து வெளியிடுகையில், போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணை செயற்பாட்டில் வடக்கு மாகாணசபையை இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கை இதுவரை இலங்கை அரசுக்கு உத்தியோகபூர்வமாகக் கிடைக்கவில்லை. எவ்வாறெனினும்
போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் இலங்கை அரசு உறுதியாக இருக்கின்றது. ஆனால், உள்ளக விசாரணை செயற்பாட்டில் மாகாண சபைகளை இணைத்துக் கொள்வதா என்று இதுவரை அரசு தீர்மானிக்கவில்லை. இது மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்படும் விசாரணை அல்ல. மாறாக முழு இலங்கைக்கும் தாக்கம் செலுத்தும் செயற்பாடாகும். ஆனால், உள்ளக விசாரணை செயற்பாட்டில் மாகாண சபைகள் தமது பிரதிநிதித்துவத்தை செய்ய முடியும். எவ்வாறெனினும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை இலங்கை அரசுக்குப் கிடைக்கப்பெற்றதும் உள்ளக விசாரணை எவ்வாறு அமையும் என்ற தீர்மானம் அமைச்சரவையினால் எடுக்கப்படும்" என்றார்.