தமிழகத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இலங்கை அகதி உட்பட 4 பேரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் கீழக்கரை ஸ்டேட் வங்கியில் ஜூலை 31ல் ஏர்வாடியைச் சேர்ந்த நல்லஇபுராகிம், சர்புதீன் ஆகியோர் வியாபாரம் தொடர்பாக சேமிப்பு கணக்கில் பணம் செலுத்தினர். அவர்கள் செலுத்திய ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 6 கள்ள நோட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து வங்கி முதன்மை மேலாளர் ரமேஷ் புகார் படி, கீழக்கரை போலீசார் வழக்கு பதிந்தனர். விசாரணையில், மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த வீரமுருகன் கட்டளைப்படி, பாம்பன் குந்துகால் பகுதியைச் சேர்ந்த ராபர்ட் படகில் கஞ்சாவை கடத்திச் சென்று இலங்கையில் கொடுத்து பணம் பெற்று வந்தது தெரிந்தது.
கஞ்சாவுக்குரிய தொகை கள்ள நோட்டுகளாக ராபர்ட்டிடம் கொடுக்கப்பட்டது. இலங்கையில் இருந்து ரூ.9.50 லட்சம் கள்ள நோட்டுகளை வாங்கி வந்த ராபர்ட் அவரது நண்பர்கள் மூலம் திண்டுக்கல், மதுரை, ராமேஸ்வரம், கீழக்கரை, ஏர்வாடி, பாம்பன் பகுதிகளில் புழக்கத்தில் விட்டுள்ளார். இது தொடர்பாக பாம்பன் செய்யது இபுராஹீம் 31, யாசர் அராபத் 32, ஏர்வாடி சபுர் இபுராகிம் 45, முகமது மிதுலாஜ் 24, மதுரை வெங்கடேஷ் 23, வீரமுருகன் 23, ராமேஸ்வரம் முருகன் 27, பாம்பன் ராபர்ட் 32, திண்டுக்கல் அடியனுாத்து அகதிகள் முகாமைச் சேர்ந்த பெனடிக்ட் 46, மார்க்கஸ் 30 ஆகியோரை கீழக்கரை போலீசார் ஆக., 2, 4 தேதிகளில் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 52 ஆயிரம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இவர்களில் மார்க்கஸ், ராபர்ட் , முருகன் , யாசர் அராபத் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, எஸ்.பி., மயில்வாகனன் கலெக்டர் நந்தகுமாருக்கு பரிந்துரைத்தார். கலெக்டர் உத்தரவுபடி 4 பேரையும் கீழக்கரை இன்ஸ்பெக்டர் ஆனந்தன் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தார்.