தென்னாபிரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி சிரில் ராம்போசாவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் ரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த தகவல்களை இலங்கையின் தனியார் செய்திச் சேவை நிறுவனமான கொழும்பு நியூஸ் டுடே அதன் இணையப் பதிப்பில் வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 22ம் திகதி தென்னாபிரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி சிரில் ராம்போசா, ஜப்பான் விஜயத்தின் இடைவழியில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார். அதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சட்டத்தரணிகள் பிரிவைச் சேர்ந்த ரத்தினவேல் என்பவர் சிரில் ராம்போசாவைச் சந்தித்து சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அளவில் உரையாடியுள்ளார்.
இதற்காக அவருக்கு விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் வழியாக உள்நுழைவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை மற்றும் தொடர்புடையவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுப்பது போன்ற விடயங்கள் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. இந்தச் சந்திப்பின் பின்னர் ஜப்பானுக்குப் பயணமான ராம்போசா அங்கு ஜப்பானின் சமாதானத் தூதுவர் யசூசி அகாசியையும் சந்தித்து உரையாடியுள்ளார். ராம்போசாவுடன் சந்திப்பை மேற்கொண்ட சட்டத்தரணி ரத்தினவேல், விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களின் சட்ட ஆலோசகராவும், விடுதலைப்புலிகளின் நீதிமன்ற சட்டத்தரணியாகவும் கடமையாற்றிருப்பதாகவும் மேலும் தெரிய வந்துள்ளது.