அண்டை நாடான பாகிஸ்தான், அணு ஆயுத தொழில்நுட்பத்தை பெற்று அந்த துறையில் வளர்ந்து வருவதை அறிந்த அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா, பாகிஸ்தானின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில், அந்நாட்டை தாக்க நினைத்தார்' என, அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ., தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அமெரிக்க உளவு அமைப்பின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:அணு ஆயுத தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடைந்து வந்த பாகிஸ்தான், அமெரிக்காவிடமிருந்து, 'எப் - 16' ரக போர் விமானங்களை வாங்குவதை அறிந்ததும், இந்தியாவின் பாதுகாப்புக்கு அது மிகுந்த அச்சுறுத்தலாக இருக்கும் என, இந்திய பிரதமர் இந்திரா கருதினார்.
அதையடுத்து, 1981ல், பாகிஸ்தானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தி அழிக்க நினைத்தார். எனினும், அந்த விவகாரத்தில் உறுதியான முடிவு எதையும் அவர் எடுக்கவில்லை. அதுபோல, பாகிஸ்தான் அணுகுண்டு சோதனை நடத்த உள்ளதை அறிந்ததும், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, இந்தியா அணுகுண்டு சோதனை நடத்த வேண்டும் என, விஞ்ஞானிகளுக்கு, இந்திரா உத்தரவிட்டார்.தார் பாலைவனத்தில் சோதனை நடத்த முடிவாகி, அதற்காக மிகப் பெரிய பள்ளம் தோண்டும் பணியும் துவங்கியது.
பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் போட்டியாக, இந்தியாவும் அணு ஆயுதங்களை குவிக்க வேண்டும் என, ஆலோசனை தெரிவித்தனர். ஆனால், இந்திராவின் முயற்சிக்கு, அப்போதைய இந்திய தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா இதுவரை பாகிஸ்தானுடன் நான்கு முறை, சீனாவுடன் ஒரு முறை போரை சந்தித்து உள்ளது. எனினும், எந்த நாட்டுடனும் தானாக முன்வந்து போரில் இந்தியா ஈடுபட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.