ரணில் விக்ரமசிங்க, டெல்லி ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார். சந்திப்பிற்கு பிறகு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியதாவது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில், இந்திய - இலங்கை நாடுகளுக்கிடையேயான நல்லுறவு மேலும் மேம்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையே உள்ள சிறப்பான ஒற்றுமையாதெனில், வரலாறு, பாரம்பரியம் உள்ளிட்டவைகளே என்று பிரணாப் முகர்ஜி கூறினார்.
இருநாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டிருந்தது. பேச்சுவாத்தையை அடுத்து நான்கு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன. இந்திய பிரதமரை சந்திப்பதற்கு முன்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜையும் ரணில் விக்ரமசிங்க சந்தித்திருந்தார். நேற்று பிற்பகல் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி, உப தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் ஆகியோரையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.