ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் இறுதி அறிக்கை வெளியிடப்படும்வரை அதுகுறித்து எதுவும் கூறமுடியாது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பின் அறிக்கையில் யார் மீதும் குறிப்பாக குற்றம் சாட்டப்படவில்லை. அத்துடன் யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பும் போர்க்குற்ற விதிகளை மீறியதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் எதிர்வரும் 24ம் திகதி மனித உரிமைகள் அமர்வின் இறுதி அறிக்கை வெளியாகும்.
அதுவரை இதுகுறித்து எதுவும் கூறமுடியாது. ஐக்கிய நாடுகள் அறிக்கையில் தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் குறித்து பாராட்டுத் தெரிவிக்கப்படும் அதேவேளை, இராணுவத்தினர் பதற்றமடையக் கூடிய வகையில் எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார். இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்கவும் கலந்து கொண்டிருந்தார்.