கடந்த காலத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமெனக் கோரி நடத்தப்பட்ட கையெழுத்துப் போராட்டத்தின் மூலப்பிரதிகள் ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலயங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழர் செயற்பாட்டுக்குழுவின் தலைவர் பேராசிரியர் வி.பி. சிவநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மணல்தரை ஒழுங்கையில் உள்ள செயற்பாட்டுக் குழுவின் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றம், இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் தேவை என்பதை வலியுறுத்திக் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டத்தில் சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் அமோக ஆதரவு கிடைத்துள்ளது. மக்கள் தாமாக முன்வந்து நீதி வேண்டி ஒப்பமிட்டுள்ளனர்.
இந்த கையெழுத்துப் போராட்டம் ஒருவரையும் பாதிக்காத வகையில் நடைபெற்றுள்ளது. சர்வதேச விசாரணைக்காக தமது கையெழுத்துக்களை இட்ட மக்களுக்கும் ஒத்துழைப்புத் தந்த அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் எமக்குக் கிடைக்கப்பெற்ற மூலப் பிரதிகளை ஐக்கிய நாடுகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு கிடைக்கச் செய்வதற்கு ஐ.நா. வின் கொழும்பு அலுவலகத்திற்கு ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுத்துவரும் அதேநேரம், அந்த கையெழுத்தின் பிரதிகளை மின் அஞ்சல் மூலம் ஐ.நா. ஆணையாளருக்கு அனுப்பும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழர் செயற்பாட்டுக்குழு தொடர்ந்தும் மக்களின் தேவைகளுக்காக போராட்டங்களை முன்னெடுக்கும் என அவர் தெரிவித்தார்.