யுத்தத்தின் போது காணாமல் போனோர் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் முன்வைக்குமாறு கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் மனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன. ஜெனீவாவுக்கான முன்னாள் இலங்கை வதிவிட பிரதிநிதிகளான தயான் ஜயதிலக்க, தமாரா குலநாயகம் உள்ளிட்ட நிபுணர்கள் சிலரினால் இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹ_சைன் முன்வைத்த யோசனைக்கு பதிலளிக்கும் வகையில், பரணகம ஆணைக்குழுவின் இரண்டாம் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என தயான் ஜயதிலக்க எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.
ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட மனுவில் மனித உரிமைகள் தொடர்பான அமைச்சின் முன்னாள் செயலாளரான ரஜீவ விஜேசிங்க, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி உள்ளிட்டவர்கள் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பரணகம ஆணைக்குழு தொடர்பில் பவ்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முறைபாடுகளுக்கு இந்த ஆணைக்குழு அதிக முன்னுரிமை வழங்கியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் இந்த ஆணைக்குழுவிற்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிவில் சமுக அமைப்புகளால் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.