கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலக வளாகத்தில் (ஒக்டோபர்,24) இடம்பெற்ற 70வது ஐக்கிய நாடுகள் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மேற்படி நிகழ்வில், பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார். அத்துடன் பாதுகாப்புச் செயலாளர் திரு. கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2015 ஆண்டானது ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். ஐக்கிய நாடுகள் சபை தனது 70 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்ற அதேவேளை இலங்கைக்கான ஐக்கிய நாட்டுக்கிளையானது தனது 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
ஐக்கிய நாடுகள் சபை 1945ம் ஆண்டு ஒக்டோபர் 24ம் திகதி நிறுவப்பட்டதுடன் இலங்கையானது 1955ம் ஆண்டு டிசம்பர் 14ம் திகதி அதில் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டது. இரட்டை ஆண்டு நிறைவுகளைக் கொண்டாடும் வகையில் இலங்கை அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கிளையும் கூட்டாக இணைந்து "அவ யூஎன் , அபே யூஎன், எங்கள் யூஎன்," எனும் தொணிப் பொருளில் ஊடக மற்றும் தகவல் தொடர்பு பிரச்சாரம் ஒன்றினை ஆரம்பித்து வைத்தது. இவ்விழா ஆரம்பத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் 70 வது ஆண்டு நிறைவையும் இலங்கைக்கான ஐக்கிய நாட்டுக்கிளையின் 60வது ஆண்டு நிறைவையும் நினைவு கூறும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் கெளரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் தொடர்பான புத்தகம் மற்றும் தபால் முத்திரை வெளியீடும் செய்யப்பட்டன. இந்நிகழ்வில், பாராளுமன்ற சபாநாயகர் கெளரவ. கரு ஜயசூரிய, அமைச்சர்கள், ஐ.நா. உதவி பொதுச் செயலாளர் – மிரோஸ்லவ ஜெண்கா (Miroslav Jenca) பாராளுமன்ற உறுப்பினர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் ஐ.நா. உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.