* ரஷ்ய விமானத்தை வீழ்த்தியதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஒப்புதல்
* தொழில்நுட்பக் கோளாறு காரணம் என எகிப்து மறுப்பு
கெய்ரோ: 224 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் எகிப்தின் சினாய் தீபகற்ப பகுதியில் மலையின் உச்சியில் மோதி வெடித்து சிதறியது. விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர். மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்துள்ளது. எகிப்தின் ஷாம் எல் ஷேக் விமான நிலையத்தில் இருந்து ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் விமான நிலையத்துக்கு 7 ஊழியர்கள் மற்றும் 217 பயணிகளுடன் ரஷ்ய விமானம் ஒன்று நேற்று காலை புறப்பட்டுச் சென்றது. விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 23வது நிமிடத்தில் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், ரஷ்ய விமானம் மத்திய சினாய் பகுதியில் மலை உச்சியில் மோதி வெடித்து சிதறியதாக எகிப்து பிரதமர் ஷெரீப் இஸ்மாயில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாகவும் அவர் கூறினார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் வெடித்து சிதறியிருக்கலாம் என பாதுகாப்பு மற்றும் விமான போக்குவரத்து அதிகாரிகளின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வெடித்து சிதறிய விமானத்தின் உடைந்த பாகங்கள் மற்றும் கருப்பு பெட்டி, வடக்கு சினாயின் அல்அரிஸ் நகர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எகிப்து விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் வெடித்து சிதறிய இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
மேலும் சம்பவ இடத்துக்கு ஆம்பூலன்ஸ்கள் விரைந்துள்ளன. இதனிடையே, எகிப்து பிரதமர் ஷெரீப் இஸ்மாயில் அவசரமாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி, விமான விபத்து மற்றும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார். மீட்பு குழுவினர் மற்றும் பாதுகாப்பு படையினர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் ரஷ்யாவின் கோகலிமாவியா நிறுவனத்துக்கு சொந்தமானது. விமானத்தில் சென்ற 217 பேரில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள் என்றும், இதில் 17 பேர் சிறுவர் என்றும் விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, விமானம் விபத்துக்குள்ளான பகுதி ஐஎஸ்் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர்கள் விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்ற அச்சமும் எழுந்தது. ஆனால், எகிப்து அரசு இந்த தகவலை மறுத்துள்ளது. தொழில்நுட்ப ேகாளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானது முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று எகிப்து பிரதமரும் கூறியுள்ளார். வீழ்த்தியது நாங்கள்தான் ஐஎஸ் தீவிரவாதிகள் அறிவிப்பு ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியது, தாங்கள்தான் என்று ஐஎஸ் தீவிரவாதிகள் கூஹறியுள்ளனர். இதுகுறித்து ஐஎஸ் தீவிரவாதிகள் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பிபிரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியது நாங்கள்தான். சிரியாவில் ரஷ்யாவின் நடவடிக்கையை கண்டித்து இந்த தாக்குதலை நடத்தினோம்பீபீ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக எகிப்து அரசு மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.