ராமேஸ்வரம்:தனுஷ்கோடிக்கு கள்ளத்தனமாக படகில் வந்த இலங்கை பெண் கூறிய பொய் தகவலால், உளவுதுறை போலீசார் குழப்பமடைந்துள்ளனர்.ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் சுற்றி திரிந்த இலங்கை பெண் ஒருவரை மண்டபம் மரைன் போலீசார் பிடித்தனர். அவரிடம் மத்திய, மாநில உளவுதுறை போலீசார் விசாரித்ததில், இலங்கை திரிகோணமலையைச் சேர்ந்த கிங்ஸ்லி மனைவி மேரி மார்க்ரெட் 58, என தெரிந்தது.இவர் 2007ம் ஆண்டு பாஸ்போர்டில் தனது கணவருடன் மருத்துவ சிகிச்சைக்கு சென்னைக்கு வந்து தங்கியுள்ளார். பின்னர் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கோபம் அடைந்த மேரி மீண்டும் இலங்கை செல்ல தனுஷ்கோடி வந்ததாக கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய உளவுதுறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த மரைன் ஏ.டி.எஸ்.பி., ஞானசிவக்குமார், மேரியிடம் மீண்டும் விசாரித்தார். அவர் கணவருடன் சென்னை அம்பத்துாரில் 8 ஆண்டுகள் தங்கியதும், கணவருடன் ஏற்பட்ட தகராறினால் கடந்த அக். 27ல் விமானம் மூலம் இலங்கை சென்றது தெரியவந்தது. மேலும், அங்கு ராணுவத்தினரின் கெடுபிடிகளைக் கண்டு பயந்து மேரி, நேற்று முன்தினம் இரவு மன்னாரில் இருந்து கள்ளபடகில் தனுஷ்கோடி வந்திறங்கியது தெரியவந்தது. இலங்கையில் இருந்து அகதியாக வந்தால் பாஸ்போர்ட் வழக்கில் சிறையில் அடைப்பார்கள் என்பதால், இதற்கு பயந்து மேரி உண்மையை மறைக்க நாடகம் ஆடுவதாக போலீசார் கருதுகின்றனர். மேரி மீது என்ன நடவடிக்கை எடுப்பது என போலீசார் குழப்பமடைந்துள்ளனர்.