இந்தியாவை பழிவாங்கும் நடவடிக்கையாக பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால், முன்னெச்சரிக்கையாக 6 மாநிலங்களில் உச்சகட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
காஷ்மீரின் யூரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்கியதற்குப் பதிலடியாக, இரண்டு நாட்களுக்கு முன் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள் மீது இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்ததாக அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் செரீப் தெரிவித்தார். இந்தத் தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலால் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ள பாகிஸ்தான் எல்லைப்புற மாநிலங்களில் பதில் தாக்குதலோ அல்லது ஐ.எஸ்.ஐ. மூலம் மறைமுகத் தாக்குதலோ நடத்தலாம் எனக் கருதப்படுகிறது.
இதனால் டில்லி, ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் உச்சக்கட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறு அந்த மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து டில்லியில் மாநிலச் சட்டசபை, பார்லிமெண்ட் , விமான நிலையம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 6 மாநிலங்களிலும் தொழிற்பேட்டைகள், மக்கள் அதிகம் கூடுமிடங்கள், வரலாற்றுச் சின்னங்கள், அரசு அலுவலகங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நவராத்திரி திருவிழா தொடக்க நாளான நாளை முதல் இம்மாத இறுதியில் தீபாவளி வரை இந்த கண்காணிப்பு நீடிக்கும் என உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.