நாடு தற்பொழுது எதிர்கொண்டிருக்கும் நிலைமையை பார்க்கும் போது இராணுவ சதிப் புரட்சி ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன எச்சரித்துள்ளார். ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் வரவு-செலவுத்திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் முதலாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தினேஸ் குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.
அவரது இந்தக் கருத்தால் நாடாளுமன்றில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருந்த நிலையிலேயே, இராணுவ சதிப் புரட்சியொன்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். அவருடைய இந்தக் கருத்தைத் தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவருக்கு எதிராக குரல் எழுப்பியதுடன், எதிர்த்தரப்பிலிருந்த ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதிலுக்குக் குரல் எழுப்பியதால் சிறிது நேரம் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
தினேஷ் குணவர்த்தன உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் இடையூறு ஏற்படுத்தும் வகையில் குரல் எழுப்பி வந்தனர். பொது எதிரணியினராகிய தமது உரிமைகள் நாடாளுமன்றத்தில் மறுக்கப்படுவதாகவும், உரிய நேரம் வழங்கப்படுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா, பண்டாரநாயக்கவை கொலை செய்தவர்கள் சுதந்திரக் கட்சியினர் எனக் கூறியதை சுட்டிக்காட்டிய தினேஸ் குணவர்தன, தமது உரிமைகள் தொடந்தும் மறுக்கப்படுமானால், இராணுவ சூழ்ச்சிக்கான அச்சுறுத்தல்லொன்றை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்ததுடன், இந்த நிலைமையை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சபையில் இருந்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பார்த்து தினேஸ் குணவர்தன கூறியதால் கொதித்தெழுந்த ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தினேஸ் குணவர்தனவிற்கு எதிராக கோசமிட்டனர்.
இதேவேளை, ஜனாதிபதி முன்னிலையில் இராணுவ சூழ்ச்சி ஏற்படப் போவதாகக் கூறுவது அவரை அகௌரவப்படுத்துவதாக அமைந்திருப்பதாக தினேஷ் குணவர்த்தனவின் பின்னர் உரையாற்றிய பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். 2015 ஜனவரி 8ஆம் திகதி இரவு இராணுவப் சூழ்ச்சியொன்று மேற்கொள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்ததாகவும், அதில் தினேஷ் குணவர்த்தன உள்ளிட்ட பலர் தொடர்புபட்டிருந்தனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
எனினும், இராணுவத்தினர் அதற்கு அடிபணியவில்லை என்று தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க, இராணுவத்தினர் ஒருபோதும் இவ்வாறான சூழ்ச்சிகளுக்கு இணங்கப்போவதில்லையென்றும் தெரிவித்துள்ளார்.