தனக்கு பிணை வழங்காமையினால் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிடம், உண்ணாவிரதத்தை கைவிடுமாறு சிறைச்சாலை அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளை அவர் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்தும் அவர் உண்ணாவிரதம் இருப்பாராயின் அவரது உடல்நலம் பாதிப்படைந்து செல்வதனாலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் சிறைச்சாலை அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருப்பதனால், தங்களது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என சிறைச்சாலை அதிகாரிகள் அவருக்கு தெளிவுபடுத்திய பின்னரும் வேண்டுகோளை மறுத்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல் நலத்துக்கு இதுவரையில் எந்தவிதமான பாதிப்பும் இல்லையெனவும் சிறைச்சாலை வைத்தியசாலை வட்டாரங்கள் அறிவித்துள்ளன.