அண்மைய தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்ட குறுகிய கால, குறிப்பான நோக்கங்களை பூர்த்தி செய்தல் பற்றியும் குற்றவாளிகளை நீதிக்கு முன்பாக கொண்டு வருவதற்கும் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் அமெரிக்க நிபுணர்கள் ஏற்கனவே இலங்கை அதிகாரிகளுடன் பணியாற்றி வருகின்றனர். இந்த ஒத்துழைப்பானது இலங்கையில் அமெரிக்க பாதுகாப்பு அணிகளின் பெரியளவிலானதும் நீண்ட கால அடிப்படையிலானதுமான பிரசன்னத்தை சுட்டிக்காட்டவில்லை.
எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய அட்டூழியங்களை தடுப்பதற்கு பாதுகாப்பு மற்றும் தொடர்பாடல் நடைமுறைகளில் மாற்றங்களை அமுல்படுத்தவும் எதிர்காலமொன்றையும் இலங்கை எதிர்பார்க்கும் நிலையில், எமது சொந்த கடந்த கால பெருந்துயரங்களில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டும் உள்நாட்டு அதிகாரிகளுடனான எமது தற்போதைய ஒத்துழைப்பின் ஊடகவும் அதற்கு உதவ அமெரிக்கா தயாராக இருக்கிறது.
புதிய அச்சுறுத்தல்களில் இருந்து இலங்கை பிரஜைகளை பாதுகாப்பதற்கு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு பொறிமுறைகளை புரிந்துகொள்வதிலும் அதை பிரயோகிப்பதிலும் இலங்கை அரசாங்கமானது அது பற்றிய முன்னெடுப்புகளை சட்ட ஆட்சியை பாதுகாப்பதாகவும் தனிநபர்கள் அல்லது குழுக்களின் மனித உரிமைகளை மீறாததாகவும் வழிபடுதல், தொடர்பாடுதல் மற்றும் அமைதியாக ஒன்றுபட்டு வாழ்வதற்கான அவர்களது இயலுமையை கட்டுப்படுத்தாதகவும் இருக்கும் வழிகளில் மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.
´இந்த பயங்கரமான தாக்குதல்களானது ஒரு சில தனிநபர்களின் செயலே தவிர ஒட்டுமொத்த சமூகமொன்றினால் மேற்கொள்ளப்பட்டதொன்றல்ல. இந்த அட்டூழியங்களை கண்டிப்பதில் அனைத்து பின்னணிகளையும் மத நம்பிக்கைகளையும் கொண்ட இலங்கையர்கள் ஒன்றுபட்டிருந்தனர். ஒற்றுமையே பயங்கரவாதத்திற்கு மிகவும் சக்திவாய்ந்த பதிலாகும்,´ என்று ஏப்ரல் 25 ஆம் திகதி ஒற்றுமையை வலியுறுத்தி விடுத்த அழைப்பில் அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தெரிவித்திருந்தார்.
´மிகவும் வெறுக்கத்தக்க இந்த குற்றச்செயல்களை புரிந்தவர்களை நீதிக்கு முன்பாக கொண்டு வருவதற்கு நாம் ஒன்றிணைந்த பணியாற்றி வரும் அதேநேரம், வலிமையான சமூகமொன்றின் ஆதார தூண்களை உருவாக்கும் ஜனநாயக கோட்பாடுகளை பாதுகாப்பதிலும் நாம் தொடர்ந்தும் விழிப்பாக இருக்க வேண்டும். தாக்குதல் நடத்தியவர்களின் மத நம்பிக்கைகளை அன்றி அவர்களது திரிபுப்படுத்தப்பட்ட சித்தாந்தங்களை பகிராத அப்பாவி மக்கள் மற்றும் அமைதியான சமூகங்களை சிதைத்து விடாமல் நாம் அதை செய்ய வேண்டும். இலங்கையின் அற்புதமான பன்முகத்தன்மையை நாம் எப்போதும் மதிக்க வேண்டும் என்பதுடன், இந்த நாடு செழிப்படைய தேவைப்படும் ஒற்றுமை கலாசாரத்தை பலப்படுத்தவும் வேண்டும்,´ என்றும் தூதுவர் டெப்லிட்ஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.