புத்தளம் நகரில் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் முகமாக புத்தளம் மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் நேற்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.அனைத்து அரச திணைக்களங்களினதும் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் ஒரே பிரதிநிதியாக புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்கள் பங்குபற்றினார்.
இதில் கருத்து தெரிவித்த நகர பிதா கே.ஏ. பாயிஸ்; வடமேல் மாகாணத்தில் எவ்வித வன்முறைகளும் இடம்பெறாத பொலிஸ் அத...்தியட்சகர் வலயமாக புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் வலயம் காணப்படுகின்றது. அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்றவன் என்றவகையில் நகரின் பாதுகாப்பு தொடர்பாக பூரண திருப்தியடைகின்றேன். அதற்காக மாவட்ட செயலாளர், பொலிஸ் மற்றும் முப்படையினர் விசேடமாக அனைத்து மதத் தலைவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். ISIS என்பது மேற்குலகினால் நெறிப்படுத்தப்பட்ட தீவிரவாத அமைப்பாகும். அதற்கும் முஸ்லிம்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் முஸ்லிம்களினால் ஒரு தாக்குதல் இடம்பெறும் என நான் நம்பவில்லை. ஆனால், ஏனைய சக்திகள் தமது எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக கிறிஸ்தவ மக்களை பயன்படுத்தி பழிவாங்கும் முகமான தாக்குதல்களை நடாத்தக்கூடும் என்றே நான் பயப்படுகின்றேன் என தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் புத்தளம் மாவட்ட செயலாளர் சித்ரானந்த, புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர், முப்படை பிரதானிகள், சர்வ மதத்தலைவர்கள், அனைத்து அரச திணைக்கள தலைவர்கள் உட்பட சிவில் சமூகத்தினரும் கலந்துகொண்டனர்.