நாட்டின் பிரதமராக பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின், தன் முதல் வெளிநாட்டுப் பயணமாக, தெற்காசிய நாடான, மாலத் தீவுகளுக்கு சென்றுள்ளார். இதன் மூலம், அண்டை நாடுகளுடான உறவுக்கு முக்கியத்துவம் என்ற அரசின் கொள்கை, மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.அவருக்கு, அந்த நாட்டின் மிகவும் உயரிய கவுரவ விருது வழங்கப்பட்டது.
இந்தியாவில் இருந்து, 1,200 கி.மீ., தொலைவில், இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக் கடலில் அமைந்துள்ளது, சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற, தெற்காசிய நாடான, மாலத் தீவுகள். நீண்ட காலமாக, நமது நாட்டின், நட்பு நாடாக இருந்து வருகிறது.மிகவும் குட்டி நாடான மாலத்தீவுகளின் முந்தைய அதிபராக இருந்த, அப்துல்லா யாமீன், சீனாவுக்கு ஆதரவான கொள்கையை கொண்டிருந்தார்.
இருப்பினும்,இந்தியாவுடன் நட்புடன் இருந்தது.கடந்தாண்டு பிப்ரவரியில், எமர்ஜென்சியை அறிவித்தார் யாமீன். அதனால், அந்த நாடுடனான உறவில் பாதிப்பு ஏற்பட்டது.அதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் வென்று, அதிபரான, இப்ராஹிம் முகமது சோலிஹ், சீனாவுக்கு எதிரான நிலைப்பாடு உள்ளவர். கடந்தாண்டு நவம்பரில், அவருடைய பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவர், மாலத்தீவுகளுக்கு மேற்கொண்ட பயணமாக அது அமைந்தது. ஆனால், அது முழு அரசு முறை பயணமாக அமையவில்லை.இந்த நிலையில், மீண்டும் பிரதமராக பதவியேற்றுள்ள, நரேந்திர மோடி, தமது முதல் வெளிநாட்டுப் பயணமாக, மாலத் தீவுகளுக்கு சென்றுள்ளார். தனி விமானம் மூலம், தலைநகர் மாலேவுக்கு வந்த மோடியை, அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர், அப்துல்லா ஷாஹித் வரவேற்றார். அங்கு, மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.பின், அந்த நாட்டின் அதிபர், சோலிஹ்ஹை சந்தித்து பேசினார்.
அந்த நாட்டின் பார்லியில் உரை என, பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்றார்.உயரிய விருதுமாலத் தீவுகள் அரசின் சார்பில், வெளிநாட்டு தலைவர்களுக்கு வழங்கப்படும், 'ரூல் ஆப் நிஷான் இஸ்ஸுதீன்' என்ற, மிகவும் உயரிய கவுரவ விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு நடந்த விழாவில், மோடிக்கு, இந்த விருதை, அந்நாட்டின் அதிபர், சோலிஹ், வழங்கினார்.
மோடியின் பயணத்தின் போது, மாலத்தீவுகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற் கான கடன் உதவி வழங்குதல் உள்பட, முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. இதை தவிர, நமது நாட்டின், கேரள மாநிலம் கொச்சியில் இருந்து, மாலத் தீவுகளுக்கு, பயணியர் கப்பல் இயக்குவது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது.
மோடியின் வெளிநாட்டு பயணத்தின் இரண்டாவது நாளான இன்று, அவர் மாலத்தீவுகளில் இருந்து நேரடியாக, இலங்கைக்கு செல்கிறார். அங்குள்ள சர்ச்சுகள் மற்றும் முக்கிய இடங்களில் நடந்த, குண்டு வெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு செல்லும், முதல் வெளிநாட்டு தலைவர், மோடி. குண்டு வெடிப்பு சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, மோடி, ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.
கடந்த, 2014ல், முதல் முறையாக பிரதமராக பதவியேற்றபோது, அண்டை நாடான பூட்டானுக்கு, தன் முதல் வெளிநாட்டுப் பயணத்தை மோடி மேற்கொண்டார். தற்போது, மாலத்தீவுகளுக்கும் மற்றொரு அண்டை நாடான, இலங்கைக்கும், இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.இதன் மூலம், அண்டை நாடுகளுடனான உறவுக்கு முக்கியத்துவம் என்ற, மத்திய அரசின் வெளியுறவு கொள்கை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா - வங்கதேசம் பேச்சு
இந்தியா மற்றும் அண்டை நாடான வங்கதேசம் எல்லையில் உள்ள பாதுகாப்பு பிரச்னைகள் குறித்த, இரு நாட்டின் எல்லை பாதுகாப்புப் படையினரின் அடுத்த கூட்டம், வங்கதேச தலைநகர் டாக்காவில், வரும், 11 - 15ல் நடக்க உள்ளது.கடந்த, 1975ல் இருந்து, இரு நாடுகளுக்கும் இடையே, எல்லை பாதுகாப்புப் படைகளின் டைரக்டர் ஜெனரல்கள் இடையேயான மாநாடு நடந்து வருகிறது. தற்போது, 48வது மாநாடு நடக்க உள்ளது.
இதில், எல்லை பாதுகாப்புப் படையின் தலைவர், ஆர்.கே. மிஸ்ரா தலைமையில், உள்துறை அமைச்சகம் உள்ளிட்டவற்றின் உயரதிகாரிகள் அடங்கிய, 20 பேர் குழு பங்கேற்க உள்ளது.கிரிக்கெட் பேட் பரிசுமாலத்தீவுகள் அதிபரை சந்தித்த, பிரதமர் நரேந்திர மோடி, தற்போது உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையொப்பமிட்ட கிரிக்கெட் பேட்டை, நினைவு பரிசாக வழங்கினார். அதிபர், சோலிஹ், கிரிக்கெட் ரசிகர் என்பதால், அவருக்கு, கிரிக்கெட் பேட்டை, மோடி பரிசாக அளித்தார்.மாலத் தீவுகள் கிரிக்கெட் அணிக்கு, பி.சி.சி.ஐ., எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் மூலம் பயிற்சி அளிப்பது தொடர்பாக பேச்சு நடந்து வருகிறது. மாலத்தீவுகளில் கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவும் வகையில், கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக, மோடியின் முன்னிலையில், ஒப்பந்தம் கையெழுத்தாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பார்லியில் உரைமாலத் தீவுகளின் பார்லிமென்டில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:மாலத்தீவுகள் மற்றும் இந்தியாவுக்கு இடையேயான நட்பு, நீண்ட வரலாறு கொண்டது. மாலத்தீவுகளின் ஜனநாயகத்தை வலுப்படுத்த, அனைத்து உதவிகளையும் எப்போதும் செய்வதற்கு, இந்தியா தயாராக உள்ளது.சில நாடுகளின் ஆதரவோடு நடக்கும் பயங்கரவாத சம்பவங்களே, தற்போது மனிதகுலத்துக்கு மிகப் பெரிய சவாலாக, அச்சுறுத்தலாக, பிரச்னையாக உள்ளது. இதை திறம்பட எதிர்கொள்ள, உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும்.பயங்கரவாதம் என்பது, ஒரு நாட்டுக்கு மட்டுமல்ல; மனிதகுலத்துக்கே ஆபத்தாக உள்ளது. அதிலும், சில நாடுகளே, பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. இந்த நீரின் அளவு, வெள்ளமாகி, நமது தலைக்கு மேலே பாய்ந்து கொண்டிருக்கிறது. இதை உலக நாடுகள் உணர வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.