ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு, பொதுபல சேனா கோரியுள்ளது.
முஸ்லிம் அடிப்படைவாதம் குறித்த பல்வேறு விபரங்கள் தங்களிடம் உள்ளதால் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்த விடயங்கள் குறித்து பல சந்தர்ப்பங்களில் தகவல் வெளியாக்கப்பட்டுள்ளன என்றும் அவ்வாறான விபரங்களை வழங்குவதற்காக குறித்த தெரிவுக்குழுவில் முன்னிலையாக எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாளையதினம் கூடவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் சாட்சி வழங்கவுள்ளார். அத்தோடு அமைச்சர் அப்துல் ஹாலிமின் சகோதரர் பாயிம் எம்.ஹசீமும் சாட்சியம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.
அவர்களுடன், மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் குறித்து கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா வழங்கிய சாட்சியின் அடிப்படையில், மத்திய வங்கி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு சபை ஆகியவற்றின் அதிகாரிகள் சிலரும் சாட்சியம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.