ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் டக்ளஸ் தேவானந்தா நேற்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களை சந்தித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னிலையாகவுள்ள வேட்பாளர் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்தார்.
ஈ.பி.டி.பி கட்சி, ஸ்ரீ லங்கா கம்யூனிச கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகளுக்கிடையிலான சந்திப்பு பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தலைமையில் கட்சி தலைமையகத்தில் இடம் பெற்றது.
நடப்பு அரசாங்கம் முன்னெடுக்கும் நாட்டுக்கு பொருத்தமற்ற பிற நாட்டு ஒப்பந்தங்கள், தாய் நாட்டை சவாலுக்குட்படுத்தும் செயற்பாடுகள் போன்ற விடயங்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துதல் அவசியமாகும். தேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியினை வீழ்த்தி நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்து கட்சிகளும் அக்கறை செலுத்தல் போன்ற விடயங்கள் இச்சந்திப்பில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
இப் பேச்சுவார்த்தையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, அனுர பிரியதர்ஷன யாப்பா, சி.பி. ரத்னாயக்க, ஸ்ரீ லங்கா கம்யூனிச கட்சியின் பிரதான செயலாளர் டி. யு. குணசேகர, பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகல காரியவசம் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.