சென்னை: திமுக அரசு கடந்த 6 மாதமாக செயல்பாடுகள் இல்லாமல் அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டுவருவதாக குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக அரசுக்கான தேனிலவு காலம் முடிந்துவிட்டதாகவும் இனி ஆக்கபூர்வமாக மக்கள் பணியாற்ற வேண்டும் இல்லாவிட்டால் பாஜக விமர்சிக்கும் என்றும் குஷ்பு கூறியுள்ளார்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் பருவமழை வெளுத்து வாங்கினாலும் சென்னையை மழை வெள்ளம் சூறையாடியுள்ளது. திருவெற்றியூர், எண்ணூர் தொடங்கி வேளச்சேரி, தாம்பரம் வரைக்கும் புறநகர் பகுதிகளிலும் வெள்ளக்காடக மாறியுள்ளது. காணும் இடமெங்கும் தண்ணீர் தண்ணீர்தான். சாலைகள் மட்டுமல்லாது வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் முதல்வர் மு.க ஸ்டாலின் 6 நாட்கள் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். அதே போல எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், தேமுதிக பிரேமலதா, சசிகலா, கமல்ஹாசன் என பலரும் மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினர்.
நுங்கம்பக்கம் வைகுண்டபுரத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். வெள்ள சேதத்தையும் இன்று பார்வையிட்டார்.
அதிமுக அரசு வடிகால் சீரமைப்பு பணிகளை முறையாக செய்துள்ளனர். அதனால்தான் சாலைகளில் தேங்கி இருந்த வெள்ள நீர் ஓரிரு தினங்களில் வடிந்துவிட்டதாகவும் குஷ்பு கூறினார். திமுக அரசு கடந்த 6 மாதமாக செயல்பாடுகள் இல்லாமல் அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டுவருவதாகவும் குற்றம்சாட்டினார்.
திமுக அரசுக்கான தேனிலவு காலம் முடிந்துவிட்டதாகவும் இனி ஆக்கபூர்வமாக மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும் இல்லை என்றால் பாஜக விமர்சிக்கும் என்றும் குஷ்பு கூறினார்.
முதல்வர் மு.க ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் இன்னும் வெள்ள நீர் வடியாமல் உள்ளது. என்ன செய்து கொண்டிருந்தார் முதல்வர் என்றும் குஷ்பு கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சிக்கு வந்த உடன், திமுக ஆட்சி தற்போது தேனிலவு காலத்தில் இருக்கிறது என்றும் அது முடிந்ததும் திமுக ஆட்சி குறித்து கருத்து தெரிவிப்பேன் என்றும் குஷ்பு கூறினார் இப்போது தேனிலவு முடிந்து விட்டு பாஜக விமர்சிக்கும் என்றும் கூறியுள்ளார்.